செந்தமிழ்சிற்பிகள்

பி.எஸ்.இராமையா (1905 - 1983) 

பி.எஸ்.இராமையா (1905 - 1983) 

அறிமுகம்

பி. எஸ். இராமையா (மார்ச் 24, 1905 - மே 18, 1983) தமிழகத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். பல சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள் எழுதியுள்ளார். மணிக்கொடி கால எழுத்தாளர் எனப் போற்றப்படுகிறார். இவர் பல திரைப்படங்களுக்கு கதை உரையாடலை எழுதியும், சில படங்களை இயக்கியுமுள்ளார்.

தமிழ்நாட்டில் வத்தலகுண்டு என்ற ஊரைச் சேர்ந்த சுப்பிரமணிய ஐயர் - மீனாட்சியம்மாள் தம்பதிக்கு கடைசி மகனாக இராமையா பிறந்தார். படிப்பில் ஆர்வம் கொண்ட இராமையா, வாரச் சாப்பாடு சாப்பிட்டும், உபகாரச் சம்பளம் பெற்றும் நான்காவது படிவம் வரையில் படித்தார். திருச்சியில் ஒரு புடவைக்கடையில் வேலை கிடைத்தது. பிறகு கடலூரில் சிறு சிறு பணிகள் செய்தார். அதுவும் ஒத்துவராமல், மீண்டும் சென்னைக்குத் திரும்பி பற்பல இடங்களில் பணியாற்றி, ஆர்ய பவன் உணவுச்சாலையில் உணவு பரிமாறும் வேலையில் சேர்ந்தார்.

எழுத்துலகில்

"ஜயபாரதி" இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். மணிக்கொடி இதழுக்குத் தொடர்ந்து எழுதினார். மணிக்கொடிக்கு விளம்பரம் சேகரித்துக் கொடுக்கும் பணியிலும் இறங்கினார். பல சிறுகதைகளை எழுதினார். இவர் மணிக்கொடி இயக்கத்தைப் பற்றி எழுதிய மணிக்கொடி காலம்என்ற இலக்கிய வரலாறு புத்தகத்திற்கு 1982ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

திரைப்படத் துறையில்

"மணிக்கொடி"யிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் திரைப்படத் துறையில் கவனம் செலுத்தினார். நாடகம் எழுதினார். 1943 இல் குபேர குசேலா என்ற திரைப்படத்தை ஆர். எஸ். மணியுடன் இணைந்து தயாரித்தார். திரைத் துறையில் இருந்தாலும், தொடர்ந்து அவர் ஆனந்த விகடன், தினமணி கதிர், குமுதம் பத்திரிகைகளில் வாராவாரம் கதைகள் எழுதி வந்தார். 1957இல் "பிரசிடென்ட் பஞ்சாட்சரம்" என்ற நாடகம் எழுதினார். அந்த நாடகம், திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு பெரும் வெற்றிகண்டது. "போலீஸ்காரன் மகள்" என்ற நாடகம், மேடையில் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இந்த நாடகமும் திரைப்படமாக எடுக்கப்பட்டது.